இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அண்டர் 19 கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 4 நாட்கள் நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.
இந்நிலையில், இந்தியா அண்டர் 19 – ஆஸ்திரேலிய அண்டர் 19 அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 71.4 ஓவர்களில் 293 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சமத் நாகராஜ் மற்றும் முகமது ஈனான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அண்டர் 19 அணி 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 104 ரன்கள் எடுத்தார். விஹான் மல்ஹோத்ரா 76 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 2வது இன்னிங்சில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி 2-ம் நாள் முடிவில் 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து, இந்திய அணியை விட 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சதம் அடித்த 13 வயது வீரர்
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அண்டர் 19 அணி தரப்பில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி 62 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவர் 104 ரன்னில் அவுட் ஆகிய நிலையில், சதம் விளாசியதன் மூலம் சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்த 2-வது இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி 56 பந்தில் சதம் அடித்திருந்தார்.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வைபவ் சூர்யவன்ஷி. இவர் கடந்த ஆண்டு, தனது 12 வயதில் ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமாகி, இத்தொடர் வரலாற்றில் அறிமுகமான இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். பீகார் அணிக்காக விளையாடிய அவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்தார்.
வைபவ் தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார் என்றும், தனது தந்தையின் ஆரம்ப வழிகாட்டுதலைப் பெற்றார் என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இதுவரை இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள வைபவுக்கு தற்போது 13 வயது 187 நாட்கள் தான் ஆகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, விளையாட்டின் மீதான தனது சொந்த ஆர்வமே தனது மகனை இந்தியாவின் உள்நாட்டு போட்டிக்கு விரைவாக முன்னேறி செல்ல தூண்டியது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
“நான் கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தேன். ஆனால் பீகாரில் கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டுக்கும் ஸ்கோப் இல்லை. நான் 19 வயதில் மும்பைக்குச் சென்று கொலாபாவில் உள்ள இரவு விடுதியில் பவுன்சராக வேலை செய்வது, சுலப் டாய்லெட்டில் அல்லது துறைமுகத்தில் வேலை செய்வது என பல வேலைகளைச் செய்தேன். நான் எனது ஓய்வு நாட்களை ஓவல் மைதானத்தில் கழித்தேன். அங்கு கிரிக்கெட் விளையாடும் சிறு குழந்தைகள் பேட்கள் மற்றும் ஹெல்மெட்களால் மூடப்பட்டிருப்பார்கள். அவற்றை மணிக்கணக்கில் பார்க்கக்கூடிய அளவுக்கு நன்றாக இருந்தன. மகனாக இருந்தாலும் சரி, மகளாக இருந்தாலும் சரி, என் குழந்தைகளை கிரிக்கெட் வீரர்களாக்குவேன் என்று அப்போதுதான் முடிவு செய்தேன்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் சஞ்சீவ் கூறியிருந்தார்

